ஊட்டி,செப்.11: காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பாரத் பந்திற்கு நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆதரவு அளிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பாரத் பந்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மாநிலங்களிலும் கடையடைப்பு போராட்டங்கள் மற்றும் வாகனங்கள் இயக்கப்படவில்லை. நீலகிரி மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கடைகள் அடைத்தும், வாகனங்களை இயக்காமலும் ஆதரவு தெரிவித்தனர். ஊட்டியில் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தது.
ஊட்டியில் மினி பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டன. குன்னூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மினி பஸ்கள், ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். பந்தலூரில் முழுஅடைப்பு: பந்தலூரில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய கடையடைப்பு,வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை.மேலும் கேரள மாநில அரசு பேருந்துகள் இப்பகுதியில் இயக்கப்படவில்லை. முழு கடையடைப்பு வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.