திண்டுக்கல்: லாக் – அப்பில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது கத்தியை காட்டி அச்சுறுத்தியதாக செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து செந்தில்குமாரையும், அவரது தம்பியையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு போலீசார் தாக்கியதில் செந்தில்குமார் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி, தலைமை காவலர்கள் ரவிசந்திரன், பொன்ராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், தற்போது மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமிக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், தலைமை காவலர்கள் பொன்ராம் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.