சென்னை : நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.12 லட்ச மாணவர்களின் தொலைபேசி எண்களை தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெற்று மாணவர்களின் ஒப்புதலுடன் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தேர்வு எழுதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முதலில் ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் மாணவ, மாணவிகள் 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறலாம் என்றும் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் ஆலோசனை வழங்கப்படும். இதற்காக 333 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் ஆலோசனை தயார் நிலையில் உள்ளார். 17ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அதை 19ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.20 லட்சத்திற்கும் மேல் அன்று தடுப்பூசி போட இலக்கு வைத்து இருக்கிறோம். இந்தியாவில் அதிக அளவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழகம்தான்’ என தெரிவித்தார்….
The post தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை.. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடக்கம்!! appeared first on Dinakaran.