துவரங்குறிச்சி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம்

துவரங்குறிச்சி, ஏப்.6: துவரங்குறிச்சி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மணியங்குறிச்சியில் ஜமீன்தாருக்கு கட்டுப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.தேருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்ற பின் மீனாட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரை மருங்காபுரி ஜமீன் ரெங்ககிருஷ்ன குமார விஜய பூச்சயநாயக்கர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலின் முன்பாக நிலை நிறுத்தப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயநீலா கலந்து கொண்டார்.

The post துவரங்குறிச்சி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: