தனிமரமான அதிமுக மாஜி அமைச்சர்; எந்த கட்சியிலும் சேர முடியாமல் நட்டாற்றில் தவிக்கும் பரிதாபம்; மா.செ. பதவியும் போச்சு: கட்சி ஆபீசும் போயே போச்சு

திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 25 பேர் மற்றும் இவர்களது ஆதரவாளர்களின் பதவிகளை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதனிடையே வேலுமணி அணியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி தர முதல்வர் விஜய் மறுத்து விட்டார். இதனால் அந்த அணியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பக்கம் தாவினர். ஆனால் அந்த அணியில் இருந்த முக்கிய தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மட்டும் இன்னும் எடப்பாடியை சந்திக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி தங்களது ஆதரவாளர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினர். ஆனாலும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த கட்சியிலும் சேர முடியாத நிலையில் இப்போது இருவரும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சி.விஜயபாஸ்கர் நிலை பற்றி புதுக்கோட்டை மாவட்ட அதிமுக வட்டாரத்தில் கூறியதாவது: அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தான் வேலுமணி அணியில் இணைந்து சி.விஜயபாஸ்கர் செயல்பட்டார். ஆனால் கட்சி தாவல் விவகாரம் பிரச்னையாக உருவெடுக்கும் என்பதால், அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேகர் மறுத்து விட்டார். இதனால் வேலுமணி தரப்பினரை முதல்வர் விஜய் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளவில்லை.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் சேரலாம் என்றாலும் ஊழல் புகார் இருப்பதால், சி.விஜயபாஸ்கரை கட்சியில் சேர்க்க விஜய் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், மீண்டும் அதிமுகவில் பழையபடி இணைந்து செயல்பட முடியாத நிலையில் விஜயபாஸ்கர் உள்ளார். காரணம், வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை, விஜயபாஸ்கர் ஒருமையில் பேசி விட்டாராம். இதனால் மீண்டும் எடப்பாடியிடம் சேர்ந்தாலும் அவர் வஞ்சம் வைத்து பழி வாங்கி விடுவார் என்று விஜயபாஸ்கர் நினைக்கிறாராம். இதனால் மீண்டும் அவர் எடப்பாடியை சந்திக்காமலேயே உள்ளார். சி.விஜயபாஸ்கரை திமுகவில் சேர்க்க கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்ப மாட்டார் என்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரகுபதி கூறியுள்ளார். இதனால் திமுக கதவும் கிட்டத்தட்ட சாத்தப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.

எனவே எந்த கட்சியிலும் சேர முடியாத நிலைக்கு விஜயபாஸ்கர் தள்ளப்பட்டு விட்டார். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக, விஜய்யை நம்பி இப்போது நட்டாற்றில் தவிக்கிறார். ஒரு காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தார். இப்போது அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது. புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தின் சாவியையும் கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி அணியிடம் ஒப்படைத்து விட்டார். மாவட்ட செயலாளர் பதவியும் பறி போய் விட்டது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் தொடர்ந்து…. ஆலோசித்து வருகிறார் என்றனர்.

Related Stories: