கொள்கையும் கத்திரிக்காயும் இல்லை தொப்புள்கொடி அறுக்காத குழந்தைதான் தவெக: இந்திய கம்யூனிஸ்ட் கடும் தாக்கு

போடி: தவெகவிற்கு கொள்கை கோட்பாடுகளும் இல்லை. ஒரு கத்திரிக்காயும் இல்லை. எங்களுடன் ஒப்பிட வேண்டாம் என தேனியில் முத்தரசன் தெரிவித்தார். தேனி மாவட்டம், போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெகவிற்கு கொள்கை, கோட்பாடுகள் இல்லை. ஒரு கத்திரிக்காயும் இல்லை. அவர்களை எங்களுடன் ஒப்பிட வேண்டாம். தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் தமிழகத்தில் கவர்னர் மூலம் மறைமுகமாக பாஜ வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், கம்யூனிஸ்ட்கள் மற்றும் சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறோம்.

இந்தியா கூட்டணியில் அவர் வருவார், இவர் வருவார் என்று கூறுவதற்கு பதிலாக பாஜவின் மதவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பை பலப்படுத்த வேண்டும். தவெக தொப்புள் கொடி அறுக்காத குழந்தை. இனி வளர, வளரத்தான் அவர்களின் வளர்ச்சி பற்றி தெரியும். ஊழல் வழக்குகளில் உள்ள நபர்கள் வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக ஆளுங்கட்சியின் ஆதரவை தேடி செல்வது வாடிக்கையாகி வருகிறது. அதுதான் தற்போது தமிழகத்திலும் நடந்து வருகிறது. அண்ணாமலை இயக்கம் துவங்கியுள்ளது, பழைய கலயத்தில் புதிய கள்ளு போல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: