இந்த தேர்தல் ஒரு விபத்து; லாட்டரி சீட்டு அடித்தது போல் தவெகவுக்கு லக்கு அடித்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி செம கலாய்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் கண்ணீர் வடித்தார்கள். 1962ல் காஞ்சிபுரத்தில் அண்ணா தோல்வியடைந்தார். அப்போது சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மதியழகன் உள்ளிட்ட சிலர் நாங்கள் ராஜினாமா செய்கிறோம். நீங்கள் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றனர். அப்போது பேசிய கலைஞர், அண்ணா தோல்வியடையவில்லை. தோற்று காட்டினார் என்று பேசினார்.

இந்த தேர்தலில் நமக்கு எந்த நட்டமும் இல்லலை. எதற்கு வெற்றி பெற்றோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. பல கட்சிகளில் இருந்த ஆதவ் அர்ஜுனா திமுக குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. திமுகவுக்கு என்று ஒரு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. தவெக கொள்கையை சொல்லி ஓட்டு கேட்டு வெற்றி பெற்றார்களா. யார் எம்எல்ஏ என்று கூட தெரியாமல் விஜய்க்காக வாக்கு அளித்துள்ளனர். ‘லாட்டரி சீட்டு அடித்தது போல் ஒரு லக்கு’ தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடித்துள்ளது. அது கூட முழு மெஜாரிட்டி இல்லை. இந்த தேர்தல் ஒரு விபத்து.

அண்ணாமலை யாரை எதிர்க்க போகிறார், யாருக்கு பி பார்ட்டியாக, சி பார்ட்டியாக இருக்கப் போகிறார். ஜெயலலிதாவையே தோற்கடித்தவர்கள் நாம். திமுக லட்சியத்துக்காக கொள்கைக்காக இயங்கும் கட்சி. இதை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: