கோனேரிகுப்பம் படுகை அணையில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் பலி

புதுச்சேரி, ஏப். 21: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (51). இவரது மகன் ஜெயசீலன் (21). தனியார் கல்லூரியில் பிசிஏ பட்டப்படிப்பை முடித்து வீட்டிலிருந்து வந்தார். இந்நிலையில், ஜெயசீலன் தனது நண்பர்கள் 6 பேருடன் கோனேரிகுப்பம் படுகை அணைக்கு நேற்று முன்தினம் மதியம் ெசன்றுள்ளார். அப்போது, படுகை அணையில் ஜெயசீலன் மற்றும் அவரது நண்பர்கள் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென ஜெயசீலன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சத்தம் போடவே அருகே இருந்த பொதுமக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் படுகை அணையில் இறங்கி ஜெயசீலனை தீவிரமாக தேடினர். பின்னர், பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்த நிலையில் ஜெயசீலனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜெயசீலன் தந்தை ரங்கநாதன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் படுகை அணையில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: