கள்ளக்குறிச்சி, ஏப். 18: கள்ளக்குறிச்சி-துருகம் சாலை பகுதியில் கடந்த 1ம்தேதி அன்று ஏஎன்பி நகை கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கடைகளை மூடிவிட்டு திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து சோதனையில் ஈடுப்பட்டதில் சுமார் ரூ.84 லட்சம் கணக்கில் வராத பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு பதுக்கிவைத்து கொடுப்பதற்காக வைக்கப்பட்ட பணமா? அல்லது மூக்குத்தி போன்ற நகைகள் வாங்குவதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரேனும் மொத்தமாக கொடுக்கப்பட்ட பணமா? என்றும் நகை கடையில் அதிகமான பணம் இருப்பு இருப்பதற்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் ஏஎன்பி நகை கடையில் தொடர்ந்து 40 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ.84 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
