முத்துப்பேட்டை அருகே சாலை திருப்பத்தில் தடுப்புச்சுவர் உடைந்ததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்-மீண்டும் அமைக்க கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே சாலையின் திருப்பத்தில் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புசுவர் உடைந்து போனதால் அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடைந்துபோன தடுப்புசுவரை மீண்டும் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலை வளைவில் இருந்த தடுப்புசுவர் சில ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்தின்போது வாகனம்மோதி உடைந்து விழுந்துவிட்டது.

பின்னர் அதில் நெடுஞ்சாலைதுறையினர் பெயரளவில் ஒரு சுவரை கட்டி சென்றனர். அதுவும் அடுத்த மாதத்தில் உடைந்து காணாமல் போனது. பின்னர் மீண்டும் கட்டுவதும், காணாமல் போவதும் இங்கு வாடிக்கையாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலைதுறை நிரந்தரமாக இந்த தடுப்பு சுவர் கட்ட முயற்சி மேற்கொள்ளவில்லை.

இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் வாகனங்கள் தடுப்புசுவர் இல்லாததால் நிலைதடுமாறி அருகேயுள்ள வாய்க்காலில் விழுந்து விபத்துகுள்ளாகிறது.

அதேபோல் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்கள் வரும்போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அடிக்கடி குடிபோதையில் குடிமகன்கள் இந்த வாய்க்காலில் தடுமாறி விழுந்து பாதிக்கபட்டு வருகின்றனர். தற்பொழுது வரை இப்பகுதியில் சிறு சிறு விபத்துக்கள் மட்டுமே நடந்து வருகிறது இனி பெரியளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இனியும் காலதாமதம்படுத்தாமல் உடனடியாக நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து நிரந்தரமாக தரமான தடுப்பு சுவரை கட்டி இப்பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: