ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா; திருநெடுந்தாண்டகத்துடன் நாளை துவக்கம்: 23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் நாளை(12ம் தேதி) தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொக்கவாசல் திறப்பு வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை இரவு 7 மணிக்கு கர்ப்பகிருஹத்தியில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பமாகிறது. பின்னர் 7.45 மணி முதல் இரவு 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம் அபிநயமும், வியாக்னமும் நடைபெறும். இரவு 10 மணிக்கு திருவாராதனமும், 10.30 மணிககு திருக்கொட்டாரத்திலிருந்து சிறப்பலங்காரமும், இரவு 11 மணிக்கு தீர்த்த கோஷ்டியும் நடைபெறுகிறது. இதனால் நாளை மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

நாளை மறுநாள்(13ம் தேதி) பகல்பத்து(திருமொழி) உற்சவம் துவங்கிறது. அன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார். காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யபிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். இதேபோல் பகல் பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் 10 நாளான வரும் 22ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் சேவை சாதிப்பார்.

23ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுவார். அப்போது நம்பெருமாள் ரத்தின அங்கியில் அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வர். சொர்க்கவாசல் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 23ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். ராப்பத்து 7ம் திருநாளான 29ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8ம் திருநாளான 30ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜன.1ம் ேததி தீர்த்தவாரியும், 2ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா; திருநெடுந்தாண்டகத்துடன் நாளை துவக்கம்: 23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: