19 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்: தாய் சோனியாவுடன் தங்க முடிவு?

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லியில் உள்ள அரசு பங்களாவை நேற்று காலி செய்தார். பிரதமர் மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்யும்படி மக்களவை செயலாளர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து அவர் எழுதிய கடிதத்தில், ` கடந்த காலங்களில் நிறைய நல்ல நினைவுகளை இந்த வீடு அளித்ததற்கு நன்றி. அரசு உத்தரவுக்கு கட்டுப்படுவேன்,’’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி நேற்று காலி செய்து சாவியை அரசிடம் ஒப்படைத்தார். அரசு பங்களாவில் இருந்த பொருட்கள் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கேயே தாய் சோனியாவுடன் வசிக்க ராகுல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post 19 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்: தாய் சோனியாவுடன் தங்க முடிவு? appeared first on Dinakaran.

Related Stories: