தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல ஆபாச படங்களுக்கு இன்றைய தலைமுறை அடிமையாகியுள்ளனர்: விழிப்புணர்வு தேவை என ஐகோர்ட் அறிவுரை

சென்னை: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் போக்சோ சட்டம் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட இளைஞரை ஆஜராகச் சொல்லி அவரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை எனவும், ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கவுன்சலிங் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, நீதிபதி அளித்த உத்தரவில், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. இதேபோல் ஒரு வழக்கில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் வராது என்று தீர்ப்பளித்துள்ளது. மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் ரகசியமாக பார்ப்பது குற்றமல்ல.

அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் எனக் கூறி இளைஞர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. முந்தைய தலைமுறை எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல இன்றைய தலைமுறை ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து இது சம்பந்தமாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்து தரவுகளையும் எந்த தணிக்கையும் இல்லாமல் பெற வகை செய்யும் மொபைல் போன்ற தொழில்நுட்பங்களால் இன்றைய இளம் தலைமுறையினர் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர். ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால் இந்த தலைமுறையினர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். பத்தில் ஒன்பது சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பதின்ம வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல ஆபாச படங்களுக்கு இன்றைய தலைமுறை அடிமையாகியுள்ளனர்: விழிப்புணர்வு தேவை என ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: