இதில், தற்காலிக வன ஊழியர் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சேலம் மண்டல வனபாதுகாவலர் ராகுல், மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆக்ரோஷமாக வன ஊழியர்களை முட்டி தள்ளிய கடமானை வன விலங்குகளுக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து 4 நாட்கள், அதன் செயல்பாட்டை அறிய கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது, தற்காலிக வன ஊழியர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பிற்கு காரணமான ஆண் கடமான் மற்றும் பெரிய கொம்புடைய மற்றொரு கடமான் என 2 கடமான்களை காட்டிற்குள் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சேலம் மண்டல வனத்துறை சார்பில் தமிழ்நாடு தலைமை வன விலங்குகள் பாதுகாவலர் சீனிவாசரெட்டிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது குரும்பப்பட்டி பூங்காவில் 37 கடமான்கள் உள்ளன. அவற்றில் 7 கடமான்கள் ஆண். அதில் இருந்து 2 கடமான்களை காட்டிற்குள் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்காலிக வன ஊழியரை முட்டிய கடமானும், மற்றொரு கடமானும் ஆக்ரோஷமாக இருக்கிறது. அந்த கடமான்களின் கொம்புகள் பெரிய அளவில் இருக்கிறது. அந்த மான்களை தொடர்ந்து பராமரிப்பதில், சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்காக அவற்றை அடர்ந்த காட்டிற்குள் விட முடிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி முறையாக கிடைக்கப்பெற்றவுடன், 2 கடமான்களையும் காட்டிற்குள் கொண்டு சென்று விடுவோம்,’’ என்றனர்.
The post உயிரியல் பூங்கா ஊழியரை முட்டிக்கொன்ற 2 கடமான்களை காட்டிற்குள் விட முடிவு: வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.