கோமா நிலையில் உள்ள கணவரை கவனிக்க கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சட்டத்தில் இடமில்லாததால் பாதுகாவலராக நியமிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லாவிட்டால் சட்ட பாதுகாவலர் என்ற முறையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் மனுதாரருக்கு கணவரின் சொத்துக்களை கையாள அனுமதி அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே மருத்துவமனை சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ள நிலையில், வீடு திரும்பிய கணவரை கவனிக்க தனி செவிலியர்களை நியமிக்க வேண்டியுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரரின் இரு குழந்தைகளும், சொத்துக்களை விற்க தாய்க்கு அனுமதி வழங்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானதல்ல.

அதற்கு நிதி தேவைப்படும் நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறக் கூறுவது முறையற்றது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் அவரின் கணவரின் பாதுகாவலராக நியமிக்கப்படுகிறார். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை விற்க சசிகலாவுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதில், 50 லட்சம் ரூபாயை சிவகுமாரின் பெயரில் நிரந்தர வைப்பீடாக முதலீடு செய்ய வேண்டும். அதில் இருந்து காலாண்டு வட்டியை எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

The post கோமா நிலையில் உள்ள கணவரை கவனிக்க கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: