சாம்பிராணி இயந்திரத்தில் தொழிலாளி கை சிக்கியது

*தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

விருதுநகர் : விருதுநகர் அருகே கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரத்தில் தொழிலாளியின் கை சிக்கியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தொழிலாளியை மீட்டனர்.
விருதுநகர் அருகே வி.சுந்தரலிங்கபுரம் கிராமத்தில் அரசு தொழிற்பேட்டை உள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான சூடம் மற்றும் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு சமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரத்தில் விருதுநகர், ஏடிபி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் ரீனோ என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக இயந்திரத்திற்குள் அவரது கை சிக்கிக் கொண்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்தனர். பின்பு ஓடிக் கொண்டிருந்த இயந்திரத்தை உடனடியாக நிறுத்தினர். அதன்பிறகு, அவரது கையை இயந்திரத்தில் இருந்து எடுக்க முயற்சி செய்தனர்.

ஆனால் முடியவில்லை. இதையடுத்து விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி இயந்திரத்தை அறுத்து ஸ்டாலின் ரீனோவை காயங்களுடன் மீட்டனர். பின்பு, ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

The post சாம்பிராணி இயந்திரத்தில் தொழிலாளி கை சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: