சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்: அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை

திருக்கழுக்குன்றம்: அதிமுகவின் 49ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, 7வது வார்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று  நடந்தது. செங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர் எம்.தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மாபா. பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஜினி நல்ல நடிகர். அவர் அரசியலுக்கு எப்போது வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்.

எந்த ஒரு நெகட்டிவ் கருத்தும் நாங்கள் கூறவில்லை. எப்போது வருகிறார், எந்த வடிவத்தில் வருகிறார், எந்த கூட்டணிக்கு ஆதரவு தரப்போகிறார், கட்சி தொடங்காமல் இருக்க போகிறாரா அல்லது கட்சி தொடங்கி வேறு கட்சியில் இணைய முடிவு செய்துள்ளாரா என இதுவரை அவர் தெளிவுபடுத்தவில்லை. பாமகவினர் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் நடத்தும் போராட்டம் சட்டத்தை மீறி நடக்கும்போது சட்டம் தன் கடமையை செய்யும். இது பாஜ ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் சரி, வேல் யாத்திரையாக இருந்தாலும் சரி, சட்டத்தை மீறும் போது சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மாவட்ட பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், முன்னாள் எம்பி மரகதம் குமரவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலாயுதம், வழக்கறிஞர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: