விழுப்புரம், டிச. 1: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் அதிகாரிகள் மனு வாங்கிக் கொண்டிருந்தனர். விக்கிரவாண்டி தாலுகா ராதாபுரம் புதுநகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன்கள் கணேசன், பாரிவள்ளல். இவர்களுக்கு சொந்தமாக கட்டப்பட்டு பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்யாமல் இருக்கிற நிலையில் நிலத்துக்கு செல்லும் பொது வழிப்பாதையை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், ஆக்கிரமித்து கொண்டதோடு நிலத்துக்கு செல்லும் பாதையை தடை ஏற்படுத்தி வருகிறார். இதனால் கணேசன், பாரிவள்ளல் ஆகியோர் தங்களது விவசாய நிலத்துக்கு சென்று பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுபற்றி அவர்கள் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், கோரிக்கை மனுக்களை கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கணேசன், பாரிவள்ளல் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.