கடலூர், நவ. 25: கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் சம்பத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் என மொத்தம் 278 பகுதிகள் கண்டறிய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 191 தற்காலிக தங்குமிடங்களும், தயார் நிலையில் உள்ளன. மேலும் மாவட்டத்தில் முதல் தகவல் அளிப்பவர்கள், 56கால்நடை பாதுகாப்பு மையம், பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் வீரர்கள், ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள் போன்ற வசதிகள் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 60,000 பேர் வரை தற்பொழுது முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக முகாம்களில் சென்று தங்கி கொள்ளலாம்.