திருவாரூர், மார்ச் 17: திருவாரூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து கட்டிய தொகையினை திரும்ப பெற்று தர கோரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவாரூர் காணியாளர் தெருவில் வசித்து வந்தவர் நீதிமோகன் (65). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் திருவாரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலான விவசாய நிலங்களை வாங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான வீட்டு மனைகளை அமைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் அரசு அனுமதி பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் அளித்த உத்தரவை அடுத்து மாநிலம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் என்பது அதல பாதாளத்திற்கு சென்றது. இதேபோல நீதிமோகன் மூலம் அமைக்கப்பட்ட பிளாட்டுகளும் விற்பனையாகாமல் போனதால் அவரிடம் பங்குதாரர்களாக இருந்த அனைவரும் தங்களது பங்கு தொகையை பெற்றுக்கொண்டு பிரிந்து சென்றனர். மேலும் வீட்டு மனைகளுக்கு முன்பணம் அளித்தவர்களுக்கு வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் முன்பணம் அளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது பணத்தினை திரும்ப பெற்றனர். இதன் காரணமாக நீதி மோகன் பெரும் பண நெருக்கடிக்கு ஆளானார்.