தொட்டியம், மார்ச் 12: தொட்டியத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கம் சார்பில் நேற்று பேரணி நடந்தது.
தொட்டியத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கம் இணைந்து நடத்திய பேரணியில் காவிரியாற்றில் ஆற்றில் தடுப்பணை வேண்டும். கோதாவரி நதியை காவிரியுடன் இணைக்க வேண்டும். காவிரியாற்றின் பாசன வாய்க்கால் தலைப்பை மாயனூர் கதவணையில் அமைக்க வேண்டும். பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த பேரணியில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.தொட்டியம் பண்ணை வீடு என்ற இடத்தில் துவங்கிய இந்த பேரணிக்கு விவசாய சங்க நிர்வாகி மருதப்பிள்ளை தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர் குமார் பேரணியை துவக்கி வைத்தார். விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, காந்திபித்தன், தியாகராஜன், மணிக்குட்டி, ராஜாராம், கிருஷ்ணமூர்த்தி, தோளூர்பட்டி ஊராட்சித் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் விவசாயிகளின் போராட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாகப் பேசினர். பின்னர் தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.