மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதிகளி–்ல பூச்சி கொல்லி நோயால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என சரமாரி புகார் கூறுகின்றனர். மதுராந்தகம் நகரை ஒட்டி மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரை பயன்படுத்தி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் தற்போது பிபிடி, 51 ஆகிய ரக நெற்பயிர்களை இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்கின்றனர். தற்போது, நன்கு செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் கதிர் விடும் தருவாயிலும், சில பகுதிகளில் கதிர்விட்டும் காணப்படுகிறது.இந்த வயல்வெளி பகுதிகளில் காணப்படும் பெருவாரியான நெற்பயிர்களில் கழுத்து நோய் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கதிர் வந்த நெற்பயிர்களில் குருத்து பூச்சி எனப்படும் ஒரு வகை பூச்சி தாக்குதலும் அதிகமாக காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் வழக்கம்போல அவர்கள் அறுவடை செய்யும் அளவுக்கான நெல் மகசூல் தற்போது இருக்காது என வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக,இதுபோன்ற பூச்சி தாக்குதலால், வழக்கமான நெல் மகசூலில் 50 சதவீதம் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதற்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு சரிவர தெரியவில்லை.