மாமல்லபுரம், பிப்.27: மாமல்லபுரம் - கோவளம் சாலையில் காய்ந்து பட்டுப்போய் சருகான மரம், முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும்போது அச்சத்துடன் கடக்கின்றனர். அந்த மரத்தை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலை முக்கிய சாலையாக விளங்குகிறது. சென்னையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த சாலை வழியாக மாமல்லபுரம் சென்று, அங்குள்ள புராதான சிற்பங்களை கண்டு ரசிக்கின்றனர். மேலும், சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரும் அனைத்து மாநகர பஸ்களும், இந்த சாலையை கடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டும்.மேலும், இந்த சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை ஓரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மரங்களை நட்டு வைத்து, பராமரித்து வந்தனர். இதற்கிடையில், கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் விட்டதால், மரங்கள் காய்ந்து சருகாகி பட்டுப்போய் காணப்படுகின்றன.