கீழ்வேளூர், பிப்.26: கீழ்வேளூர், கச்சனம் சாலையில் நள்ளிரவில் தோண்டப்படும் பள்ளத்தில் உள்ள மண் குவியலால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் கச்சனம் சாலையின் இரண்டு பக்கமும் சுமார் 3 அடி இடம் மட்டுமே உள்ளது. இதில் மின் கம்பங்கள், பெயர் பலகைகள், மரங்கள் உள்ளது. இந்நிலையில் சாலையின் பக்கங்களில் தொலை தொடர்பு கேபிள் பழுது பார்க்கும் பணி, குடிநீர் குழாய் பழுது பாக்கும் பணி மற்றும் பதிக்கும் பணிக்காக பள்ளங்கள் அடிக்கடி தோண்டப்பட்டு வருகிறது. சாலையின் இரண்டு பக்கமும் போதிய இடம் இல்லாத நிலையில் சாலை அருகிலேயே பள்ளங்கள் தோண்டப்படுவதால் ஒரு வாகனம் செல்லும் போது, எதிரே வரும் வாகனம் மாறி செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. தற்போது கீழ்வேளூர் கச்சனம் சாலையில் 4 இடங்களில் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் மற்றும் வள்ளவிநாயகம் கோட்டம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பழுது பாக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலையிலேயே மண் குவிக்கப்பட்டுள்ளது.