காஞ்சிபுரம், பிப்.26: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நேற்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கடந்த 19ம் தேதி மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.