திருத்துறைப்பூண்டி, பிப்.20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பதற்கான கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியர் அருள் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், ஆசிரியர் தெய்வசகாயம் ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபிக், ஆசிரியர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர் பாஸ்கரன் பேசுகையில், பிளாஸ்டிக் உறையில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் தட்டுகளில் உணவு பொருட்கள் உண்ணக் கூடாது. பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் துணி பைகளை பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக்கால் ஆன புரிஞ்சு குழாய்களை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகளை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். விழாக்காலங்களில் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட வண்ணக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கி அருந்த வேண்டாம் என்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் பேசினார்.பின்னர் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆசிரியர்கள் ராமமூர்த்தி, நாச்சிமுத்து, அக்பர் அலி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.