வாலாஜாபாத், பிப். 20: குண்ணவாக்கம் ஊராட்சியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை சம்பந்தப்பட்ட போலீசாரும் கண்டு கொள்வதில்லை, அதனை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கண்காணிப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் குண்ணவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், ஊராட்சியின் முக்கிய தொழிலான கல் அரவை இயந்திரங்கள், தொழிற்சாலைகள் என 10க்கும் மேற்பட்டவைகள் இயங்குகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் செயல்பட்டுவரும் அரவை இயந்திர தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் இயந்திரங்களின் பாகங்களும், தேவையின்றி கிடக்கும் இரும்பு பொருட்களும் தொடர்ந்து திருடு போவதாக, தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்படுகிறது.