மொடக்குறிச்சி, பிப்.20: மொடக்குறிச்சியில் உழவர் உற்பத்தியாளர் கருத்தரங்கம் நேற்று நடந்தது. சிவகிரியில் துல்லிய பண்னை உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளது. இதில், சிவகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த அமைப்பில் தங்களை ஒருங்கிணைத்துள்ளனர். இதன்மூலம், மத்திய, மாநில அரசுகள் விவசாய உற்பத்தியை மேம்படுத்திட, விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் வேளாண் உபகரணங்களை மானிய விலையில் பெற்று தருதல், தேவையான கடனுதவி, பயிர் காப்பீடு செய்தல், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம், இடுபொருட்களை வழங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைத்தல் உள்ளிட்டவற்றை தரத்துடன் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு பெற்று தருகின்றனர். உழவர்,உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேளாண் விளைபொருட்களை, லாபகரமான விலையில் சந்தை படுத்துதல் குறித்து வாங்குவோர், விற்போருக்கான கருத்தரங்கம் நடந்தது. விளைபொருட்களை வாங்குவோர் சார்பில் 40 உழவர் உற்பத்தியாளர் கம்பெனி இயக்குனர்களும், முதன்மை செயல் அலுவலர்களும், விற்போர் சார்பில் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.