செய்யூர், பிப்.19: செய்யூர் அருகே சூனாம்பேடு ஊராட்சி வில்லிப்பாக்கம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்துள்ள நிலையில் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால், இங்குள்ள குழந்தைகள் பெரும் அவதியடைகின்றனர். சூனாம்பேடு ஊராட்சி வில்லிப்பாக்கம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. தற்போது இந்த அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்துக்கு முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டிடத்தை புனரமைப்பதற்காக, மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பின் அனைத்து பணிகள் முடிந்த பின்னரும், இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் இங்கு மின்விசிறி வசதி இருந்தும் குழந்தைகள் கடும் புழுக்கத்தில் அவதிப்படுகின்றனர்.