கடலூர், பிப். 17: கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் ஆகிய வட்டாரங்களில் 3,625 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்னையில் ருகோஸ் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.
இது குறித்து வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கார்த்திகேயன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் மற்றும் பூச்சியியல் துறை பேராசிரியர் ராஜன் உள்ளிட்டோர் குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம், கோதண்டராமபுரத்தில் ஆய்வு செய்தனர். சுருள் வெள்ளை ஈக்கள் பாதிப்புகள் தொடர்பான அறிகுறிகள் தென்னை மரத்தின் இலைகளின் அடிப்பாகத்தில் காணப்பட்டது. மேலும் இதன் பாதிப்பால் முதிர்ந்த ஈக்களும் அதன் குஞ்சுகளும் இலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. ஈக்கள் சவுக்கார் ஆரஞ்சு குட்டை, மலேசிய மஞ்சள் குட்டை, பச்சை குட்டை ரகங்களில் அதிகம் காணப்படுகிறது.