ஏரல், பிப். 12: ஏரலில் இருந்து சென்னைக்கு சென்று வந்த அரசு பஸ், கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வியாபார ஸ்தலத்தில் ஏரல் மூன்றாவது பெரிய வணிக நகரமாக உள்ளது. இங்குள்ள வியாபாரிகள், சரக்கு கொள்முதல் மற்றும் விற்பனை சம்மந்தமாக மதுரை, திருச்சி, சென்னை என பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஏரலில் இருந்து முதன்முதலில் சென்னைக்கு செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு முன் திசையன்விளையில் இருந்து ஏரல் வழியாக சென்னைக்கு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் நல்ல வருமானத்துடன் ஓடிய நிலையில் அதன்பின் நிறுத்தப்பட்டது. பின்னர் ஏரலில் இருந்து பெருங்குளம், பண்டாரவிளை, சாயர்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி வழியாக சென்னைக்கு (தடம் எண் 178) பஸ், திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் ஏரலில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ.640 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தனியார் பஸ் டிக்கெட் விலையை விட குறைவாக இருந்ததால் இந்த பஸ்சில் நல்ல கூட்டம் இருந்து வந்தது. இந்த பஸ்சினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்று வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்த பஸ் திடீர் என நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பஸ்சை மீண்டும் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.