கடலூர், பிப். 11: கடலூர் மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் வடமாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் இடத்தில் கடலூர் மாவட்டம் உள்ளது. இதனால் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. சென்னை- திருச்சி, சென்னை- கும்பகோணம், சென்னை-நாகப்பட்டினம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக செல்கின்றன. கடலூர் மாவட்டத்தில் சாலைகள் தரமற்று இருந்ததாலும், சாலை விதிமுறைகள் கடை பிடிக்கப்படாததாலும் கடந்த காலங்களில் ஆண்டு தோறும் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் நிகழ்ந்து வந்தன. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டினை விட 2019ம் ஆண்டு விபத்துகளும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக காவல்துறையின் ஆண்டு புள்ளி அறிக்கை விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கடலூர் மாவட்டம் முழுவதும் 2018ம் ஆண்டில் மோட்டார் வாகன விதிமீறல் வழக்குகளாக குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 6,601 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டில் 6,962 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2018ம் ஆண்டில் 1,11,344 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டில் 2,70,958 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதர பிரிவுகளின் கீழ் 2018ம் ஆண்டில் 1,15,683 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டில் 1,34,180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அபராத தொகையாக 2018ம் ஆண்டில் ரூ.3.53 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டில் ரூ.4.18 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.