கருங்கல்பாளையம் சந்தையில் மாடு வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்

ஈரோடு, ஜன.31: ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் குறைந்த அளவே மாடுகள் விற்பனைக்கு நேற்று வந்ததால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி செக்போஸ்ட் அருகே வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். வாரந்தோறும் சராசரியாக 800 மாடுகளுக்கு மேல் வரத்தாகும். மாடுகளை வாங்க பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர்.

இந்நிலையில், நேற்று கூடிய சத்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் குறைவான மாடுகளே வரத்தானது. இதனால், சந்தைக்கு அதிகளவில் மாடுகளை வாங்க வந்த வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து குறைந்த எண்ணிக்கையிலேயே மாடுகளை வாங்கி சென்றனர்.இதுகுறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில்,`பொங்கல் பண்டிகை முடிந்ததால் கடந்த வாரம் 650 மாடுகள் வரத்தானது. ஆனால், இந்த வாரம் கூடிய சந்தையில் பசு-250, எருமை-150, கன்று-150 என மொத்தம் 550 மாடுகளே வந்தது. வரத்தான மாடுகளில் 85 சதவீதம் விற்பனையானது. கோடை காலம் துவங்கினால் மாடுகள் விற்பனை அதிகரிக்கும்’ என்றனர்.

Related Stories: