சாத்தான்குளம் அருகே அண்ணனை வெட்டிய தம்பிக்கு வலை

சாத்தான்குளம், ஜன. 30: சாத்தான்குளம் அருகே புதுக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கன் (51). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இந்திரா மற்றும் மகன்கள் ஆறுமுகநயினார்(30), முத்துப்பாண்டி(24). 2வது மனைவி சுதா(38).

குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2013ம் ஆண்டு ரெங்கனை, அவரது 2வது மகன் முத்துபாண்டியை கொலை செய்தார். இந்த வழக்கில் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தற்போது முத்துப்பாண்டி ஜாமீனில் உள்ளார். இவரது தாய் இந்திரா வீட்டிற்கு முத்துபாண்டி செல்லாமல் சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில் உள்ள சித்தி சுதா வீட்டில் இருந்து வந்தார்.

இதனிடையே முத்துப்பாண்டியை அழைத்து வருமாறு மூத்த மகன் ஆறுமுகநயினாரிடம் இந்திரா கூறினார். ஆறுமுகநயினார், நேற்று முன்தினம் முத்துப்பாண்டியிடம் சென்று தாயை பார்க்க வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, ஆறுமுகநயினாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். காயமடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தட்டார்மடம் எஸ்ஐ முத்துசாமி வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள முத்துப்பாண்டியை தேடி வருகிறார்.

Related Stories: