திண்டுக்கல், ஜன. 24: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு தரத்தினை மதிப்பீடு செய்து சான்றளிப்பதற்காக தேசிய அளவிலான லக்ஷயா குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மாதம் சராசரியாக 600 பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது. அதேபோல் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவிலும், பிறந்த குழந்தைகள் முதல் 1 வயது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு ரூ.18 கோடி செலவில் ஒரு தரைத்தளம் மற்றும் 5 மாடிகளுடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவை தரத்தின் அடிப்படையில் கூடுதல் நிதி உதவி ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.