தேவாரம், ஜன. 23: கோம்பை பேரூராட்சி வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, பெருகிவரும் குடியிருப்புகள் போன்றவற்றால் கோம்பை மாநில நெஞ்சாலையில் வாகன நெரிசல் உண்டாகி வருகிறது. குறிப்பாக உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை வழியே தேவாரம் செல்வதற்குள் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் திண்டாடுகின்றனர். காலை நேரங்களில் அதிகமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. இதேபோல் சரக்கு லாரிகள், டூவீலர்கள், கார்கள் போன்றவையும் அதிகளவில் செல்கின்றன. இவை அனைத்தும் கோம்பை கிராம சாவடி வழியே செல்லும் போதும், தேவாரத்தில் இருந்து அண்ணாசிலை வழியே செல்லும்போது வாகன நெரிசல் உண்டாகிறது. சாலைகளின் இரண்டுபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ள நிலையில் எதனையும் போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.