சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து குறைவு

வருசநாடு, ஏப். 29: தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மேகமலை வனப்பகுதியில் கோடைக்கால மழை இல்லை. அதன் காரணமாக அருவியில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தொடர் வெயில் தாக்கம் காரணமாக தற்போது அருவியில் மிக குறைந்த அளவிலான நீர்வரத்து மட்டுமே உள்ளது.

விடுமுறை தினமான நேற்று அருவியில் குளிப்பதற்கு மதுரை, திண்டுக்கல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். ஆனால் அருவியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிலர் அருவியின் கீழ் பகுதியில் குளம் போல தேங்கியுள்ள நீரில் குளித்துவிட்டு சென்றனர். இந்நிலையில் தற்போது அருவியின் மேல் பகுதியில் மட்டும் லேசான அளவில் நீர்வரத்து உள்ளது.

அந்த இடத்தில் இருந்து மேகமலை, குமணன்தொழு உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த 52 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் அருவியின் மேல் பகுதிக்கு சென்று குளித்து குடிநீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது. எனவே நீர்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்க வேண்டும் இதற்கு வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து குறைவு appeared first on Dinakaran.

Related Stories: