நாகர்கோவில், ஜன.23: ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் மக்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கூறினார். குமரி மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி கூட்டம் நாகர்கோவிலில் ரோட்டரி கம்யூனிட்டி சென்டர் அரங்கில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஊராட்சி தலைவர் தகுதி என்பது மிக முக்கியமானதாகும். நேரடியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசுக்கு சொல்கின்ற அதே வேளையில் குறைகளை நிறைவேற்றுகின்ற பதவி ஆகும். மக்களுடன் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளுக்கு முடிவு எடுக்கவும், தீர்வு காணவும் இயலும். கிராம சபை என்னும் அதிகாரம் ஊராட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பான ஒன்றாகும். ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் மக்களின் குறைகளை உடனே தீர்க்க வேண்டும். குறைகள் என்னென்ன உள்ளன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாவட்ட அளவில் அதிகாரிகளால் புரட்சி ஏதும் செய்ய இயலாது. ஊராட்சி தலைவர் பதவியும் ஒரு அதிகாரிக்கு இணையானது. எந்தெந்த திட்டங்கள் ஊராட்சிகளுக்கு பொருந்தும், செயல்படுத்த முடியும் என்பதை அறிந்து எந்த துறை சார்ந்த திட்டமாக இருந்தாலும் அதனை உங்கள் பகுதியில் செயல்படுத்திட தயார் செய்ய வேண்டும்.