சிவகங்கை, ஜன. 22: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட நகை, பயிர்க்கடன் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 2014ல் ஓரளவு மழை பெய்த நிலையில் 2015ல் வடகிழக்கு பருவமழை காலத்தில் விவசாயத்திற்கான போதிய மழை பெய்யவில்லை. மழை இல்லாமல் சுமார் 70 சதவீத பயிர்களும், குலைநோய் தாக்குதலால் 20 சதவீத பயிர்களும் பாதிக்கப்பட்டன. 2016ம் ஆண்டும் மழை இல்லாமல் வறட்சியால் நூறு சதவீத பாதிப்பு ஏற்பட்டது. 2017ம் ஆண்டில் 72 ஆயிரத்து 153 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்த நிலையில் முழுமையாக அனைத்து பயிர்களும் கருகின. 2018ம் ஆண்டும் மாவட்டம் முழுவதும் நூறு சதவீதம் விளைச்சல் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 2018ம் ஆண்டிற்கான பாதிப்பு சதவீதத்தில் குளறுபடி நிலவுவதால் இழப்பீடு வழங்கலில் குளறுபடி ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாமல் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் போதிய இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. ஏராளமான விவசாயிகளுக்கு ரூ.10 லிருந்து ரூ.100 வரை கூட இழப்பீடாக வழங்கப்பட்டது.