நாகை, ஜன.21: நாகை மாவட்டத்தில் புகையான் நோய் தாக்குதல் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நாசம் அடைந்தது. நாகை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து நல்ல மகசூல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு சாகுபடி அடைந்த சம்பா பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் நாகை மாவட்டம் தேமங்கலம், அடிபள்ளம், வங்கார மாவடி, கடம்பரவாழ்க்கை, பெருங்கடம்பனூர், சீயாத்தமங்கை, திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் டிகேஎம் 13, சொர்ணாசப், பிபிடி உள்ளிட்ட நெல் ரகங்களில் புகையான் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் புகையான் நோய் தாக்குதல் காரணமாக நெற்கதிர்கள் பதராக மாறியுள்ளது.