முத்துப்பேட்டை, ஜன.20: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புககளுக்கு கொள்ளிடத்திலிருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப்லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது. பின்னர் அருகிலிருக்கும் ஊராட்சி கிராம பகுதிகளுக்கு பைப்லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த திருப்பத்தூர் சங்கேந்தி சாலையில் வடசங்கேந்தி சந்திப்பு உள்ள மாங்குடி பழம்பாண்டி ஆற்று பாலத்தில் செல்லும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மெயின் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதும் அதனை முறையாக சீர்மைக்காததால் மீண்டும் மீண்டும் சரி செய்வதுமாக அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது இப்பகுதி குழாயின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 6மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாகி மாங்குடி வடிவாய்க்கால் மற்றும் பழம்பாண்டி ஆற்றில் செல்கிறது.