முத்துப்பேட்டை, ஜன.8: திருவாரூர்மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார;த்தாண்டபுரம் நாச்சிக்குளத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், ரத்து செய்யக் கோரியும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முன்னதாக ஜமாஅத் தலைவர் தஸ்தகீர் தலைமையில் நாச்சிக்குளம் முகைதீன் பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடியை ஏந்தி பங்கேற்றனர். தொடர்ந்து பேரணி முகைதீன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு நடுத்தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வந்து நாச்சிக்குளம் கடைத்தெருவிற்கு வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மக்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும், சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.