சீர்காழி, டிச.30: சீர்காழியில் வாழைக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. நாகை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீர்காழி வட்டத்திற்கு நடப்பாண்டு 2019-20 ரபீ பட்டத்துக்கு வாழை பயிர்களுக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3,065 பிரீமியம் செலுத்தி ஒரு எக்டேருக்கு ரூ.151, 141 இழப்பீடாக பெறலாம். வாழை பயிர் காப்பீடு செய்ய சீர்காழி சரகத்தில் 4 கிராமங்கள், திருவெண்காடு சரகத்தில் 6 கிராமங்கள், வைத்தீஸ்வரன் கோயில் சரகத்தில் 5 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனவே வாழை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்களது பயிரை இயற்கை சீற்றங்களான புயல், கனமழை, கடும் வறட்சி, பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடுசெய்யும் பொருட்டு பயிர் காப்பீடு செய்யலாம்.