கயத்தாறு டிச. 30: கயத்தாறு அருகே குடிநீர், சாலை வசதிகளை முறையாக செய்துதரக்கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். கயத்தாறு ஒன்றியம், அய்யனாரூத்து கிராமம் அம்மன்கோவில் வடகிழக்குத் தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் முறையாக குடிநீர் மற்றும் சாலை வசதி இன்றி மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் தினமும் சுமார் அரை கி.மீ. தொலைவுள்ள பகுதிக்கு நடந்துசென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் தொடர்கிறது. மேலும் இத்தெருவில் சாலை வசதியின்றி மண்பாதையாக அதுவும் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக இருக்கிறது. கழிவுநீர் செல்ல வாறுகால் வசதியும் இல்லை என்பதால் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர், கழிவுகளோடு கலந்து தெருக்களில் நாட்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதில் உருவாகும் கொசுக்களால் சுகாதாசீர்கேடு நிலவுகிறது.