ஜேசிபி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

குளத்தூர், மே 7: குளத்தூர் அருகே காற்றாலை நிறுவன ஜேசிபி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, குளத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் காற்றாலைகளை தனியார் நிறுவனங்கள் அமைத்து வருகிறது. இதேபோல் குளத்தூரை அடுத்த வெங்கடாசலபுரத்தில் காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஜேசிபியை டிரைவர் சங்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சமுத்திரம் மகன் மாரிச்செல்வம் ஓட்டி வந்துள்ளார். அப்போது ஜேசிபியை தூத்துக்குடி சிலுவைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த மூக்காண்டி மகன் பத்மநாபன், அவரது நண்பர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், வடக்கு கல்மேடு கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் ரகுபதி ஆகியோர் வழிமறித்து உள்ளனர். காற்றாலை நிலத்திற்கு செல்லும் பாதையில் தனக்கும் பங்கு உள்ளது. இந்த பாதையை பயன்படுத்தக் கூடாது எனக் கூறிய பத்மநாபன், நண்பர்களுடன் சேர்ந்து ஜேசிபி டிரைவரை தாக்கி உள்ளார். ஜேசிபி வாகனத்தையும் கல்லால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து குளத்தூர் போலீசில் மாரிச்செல்வம் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ முத்துராஜா வழக்கு பதிந்து பத்மநாபன், ரகுபதி ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவான ஆம்ஸ்ட்ராங்கை தேடி வருகிறார்.

The post ஜேசிபி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: