திருக்கோவிலூர், டிச. 29: திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசல் வீதியில் வரதராஜன் மகன் நித்தியானந்தம் (69) என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 7 வருடமாக பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் அப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கை அணைத்து, பின்னர் ஏடிஎம் மையத்தின் உள்ளே நுழைந்து கண்காணிப்பு கேமரா மீது கருப்பு ஸ்பிரே அடித்துள்ளனர். தொடர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்ததில், இயந்திரம் பாதியளவு உடைந்த நிலையில் பணம் இருந்த பெட்டகத்தை உடைக்க முடியாததால் அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். முன்னதாக மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்க ஏடிஎம் மையத்தின் உள்ளேயும், வெளியேயும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ் மற்றும் போலீசார் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.