செய்யூர், டிச. 13: அச்சிறுப்பாக்கம் அருகே ஆட்டுப்பட்டி கோட்டை புஞ்சை கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன் கோயிலில் கார்த்திகை தினத்தையொட்டி தீபத் திருவிழா கோலாகலமாக நடந்தது. செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியம் ஆட்டுப்பட்டி கோட்டை புஞ்சை கிராமத்தில் சுயம்பு வனதுர்க்கையம்மன் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வந்த நிலையில், இந்தாண்டு பெய்த மழையால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதையொட்டி, வனதுர்க்கையம்மன் சித்தர் பீடத்தில் மழை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று, கார்த்திகை மாத தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.