பைக் மீது பேருந்து மோதி விபத்து மகன் கண்ணெதிரே தந்தை பரிதாப பலி

பண்ருட்டி, டிச. 13: பண்ருட்டி தண்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (45), கூலி தொழிலாளி. இவரது மகன் சுஜித் (17). நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தந்தை, மகன் இருவரும் சொந்த வேலையாக கடலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணன் பைக்கை ஓட்டினார். கடலூர் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது எதிரே கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின் புறம் அமர்ந்திருந்த சுஜித் படுகாயமடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர், படுகாயம் அடைந்த சுஜித்தை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விபத்தில் பலியான கிருஷ்ணன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கவுரி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து டிரைவர் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கீழ்பாதி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கலைச்செல்வன் (40) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: