சிவகாசி, டிச.12: சிவகாசி பகுதியில் உள்ளாட்சி தேர்தல் களைகட்டியுள்ளது. நேற்று பவுர்ணமி என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் டிச.27, 30ம் தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 16ம் தேதி மனு தாக்கல் செய்ய இறுதி நாள், 17ம் தேதி வேட்புமனு பரிசீலனை, 19ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுதல் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்த வரையில் 54 ஊராட்சி தலைவர் பதவி, 429 உறுப்பினர் பதவிகளுக்கும், 31 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக வேட்பு மனு தாக்கல் மந்த நிலையில் இருந்தது. நேற்று பெளர்ணமி என்பதால் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தனர். பிரபல அரசியல் கட்சிகள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களை வாகனங்களில் அழைத்து வந்து மாஸ் காண்பித்தனர். மனுத் தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்ததும், ஆதரவாளர்கள் வேட்பாளருக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.