நாகை, டிச.12: ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெண்கள் உடனடியாக காவலர் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று காவலர் செயலி அறிமுக விழாவில் எஸ்பி செல்வநாகரத்தினம் கூறினார். நாகை அருகே பாப்பாக்கோயில் ஐசக்நியூட்டன் கல்லூரியில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவி செயலியான காவலர் செயலி அறிமுகவிழா நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் ஆனந்த் வரவேற்றார். காவலர் செயலியை எஸ்பி செல்வநாகரத்தினம் அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: இன்றைய நவீன அறிவியல் உலகத்தில் ஸ்மார்ட் செல்போன் முக்கிய அங்கம் வகிக்கின்றது. எனவே எல்லா மாணவிகளும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவீர்கள். நமது நாட்டில் 60 கோடி ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 5 கோடி ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர சாதாரண போன்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் பெண்களை பாதுகாக்க காவலர் துறை காவலர் செயலி என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பெண்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகியவற்றை எடுத்து விட்டு முதலில் இந்த காவலர் செயலியை பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.